குறைந்த செலவிலான ராக்கெட் எரிபொருள்

கொச்சி : குறைந்த செலவிலான, ராக்கெட் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரைவிட, குறைவான செலவில் ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு, திரவ நிலை எரிபொருளும், திட நிலை எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன.

கிரயோஜெனிக் எரிபொருள் இன்ஜின் வடிவமைப்பதில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பகுதி கிரயோஜெனிக் தொழில்நுட்பம், ராக்கெட் செலுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.இந்த எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை ஆக்சிஜன் மூலம் உருவாக்கப்படுகிறது. கிரயோஜெனிக் இன்ஜின்களில் திரவநிலை ஹைட்ரஜன் மற்றும் திரவ நிலை ஆக்சிஜன் நிரப்பப்பட வேண்டும். திரவநிலை ஹைட்ரஜன் நிரப்புவது பெரும் சிரமமான காரியமாக உள்ளது.

இதற்கு பதிலாக, மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை ஆக்சிஜன் மூலம் உருவாக்கப்படும் லாக்ஸ்-கெரசின் என்ற எரிபொருளை, இன்ஜினில் நிரப்புவதும் எளிது; செலவும் மிகக்குறைவு.மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 18 ரூபாய். திரவ நிலை ஆக்சிஜன் ஒரு லிட்டர் ஆறு ரூபாய். லாக்ஸ் - கெரசின் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவு ஏற்படும். திட நிலை எரிபொருள் ஒரு கிலோவுக்கு 1,500 ரூபாய் செலவு ஏற்படுகிறது.லாக்ஸ் - கெரசின் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருந்தாலும், இதை மேலும் நுட்பமாக கையாள்வது குறித்து உக்ரைன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் உக்ரைன் பங்குதாரராக இல்லாவிட்டாலும், பழைய சோவியத் ரஷ்யா கையாண்ட தொழில்நுட்ப முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய எரிபொருள் தயாரிப்பு முழு வெற்றி பெற் றால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் செலவு பெரிதும் குறையும். 2012ம் ஆண்டை இலக்காக வைத்து, மறுபயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்டு வரும் ராக்கெட்டிலும், இதை பயன்படுத்த முடியும்.

கடற்பாசியில் இருந்து...

-வாஷிங்டன்: வானிலை மாற்றத்துக்கு மட்டும் காரணமாக இல்லாமல், சுற்றுச்சூழலை பாதிக்காத "பயோ' எரிபொருள் உற்பத்தி செய்யவும் கடற்பாசி பயன்பட உள்ளது!காட்டாமணக்கு உட்பட, பல தாவரங்கள் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள இயற்கையான மாற்று எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. இந்தியாவும் இது போன்ற திட்டங்களில் இறங்கியுள்ளன. கோஸ்ட்டா ரிகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப்போது, கடற்பாசியில் இருந்து மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.கடற்பாசி உற்பத்தி, கடந்த 1950 ல் இருந்து 60 மடங்கு பெருகியுள்ளது. ஆசிய, பசிபிக் கடலில் இருந்து தான் இதன் 91 சதவீத உற்பத்தி கிடைக்கிறது. ஆண்டுக்கு எட்டு கோடி டன் கடற்பாசி ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடற்பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், "பயோ' எரிபொருள் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடற்பாசி இப்போது உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிராணிகளுக்கு இரையாகவும் , விவசாயத்துக்கு உரமாகவும் கூட பயன்படுத்தப் பட்டு வருகிறது.இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில்," பல நாடுகளில் கடலில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கடல் வளம் குறைவதுடன் அதன் பயன்பாடும் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கடல் வளம் பாதிக்காத நிலையில் கடற்பாசியை வளர்த்து அதன் மூலம் எரிபொருளை உற்பத்தி செய்தால் எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க முடியும். உலக வெப்பமயமாதலை குறைக்க முடியும்' என்று தெரிவித்தனர்.

தண்ணீரே தேவையில்லாத வாஷிங் மிஷின்

இப்படியும் இருக்குமா என்ன? உண்மையான்னு பாக்கணும்!
உண்மைதான்http://tinyurl.com/6m5clzபாருங்க
-----------
11/6/2008
தண்ணீரே தேவையில்லாத வாஷிங் மிஷின் அறிமுகம்

லண்டன்:தண்ணீரே தேவைப்படாத வாஷிங் மிஷின்கள், பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிரிட்டன் மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம். தற்போது பிரிட்டன்வாசிகள், சராசரியாக ஒரு நாளுக்கு 21 லிட்டர் தண்ணீரை, துணிகளை சலவை செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு உபயோகத்துக்காக, பயன்படுத்தும் தண்ணீரில் 13 சதவீதம் சலவை செய்வதற்காக பயன்படுத்தப் படுகிறது.பிரிட்டனில், வாஷிங் மிஷின்கள் தான் பெரும்பாலும் சலவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஆண்டுதோறும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சத்துக்கு மேற்பட்ட வாஷிங் மிஷின்கள் விற்பனையாகிறது. தற்போது நடைமுறை யில் உள்ள வாஷிங் மிஷின்களில், ஒரு முறை, ஒரு கிலோ எடையுள்ள துணியை சலவை செய்ய, 35 கிலோ தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள வாஷிங் மிஷின்களில், இதில் வெறும் 2 சதவீதம் தண்ணீரும், மின்சாரமும் போதுமானது। இந்த வாஷிங் மிஷின் களை, ஜீரோஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு முறை சலவை செய்ய ஒரு கப் தண்ணீர் போதுமானது. இதில் உள்ள பிளாஸ்டிக் சிப்கள், துணிகளில் உள்ள கறைகள், அழுக்குகளை அகற்றி, உலர்த்திவிடும். தனியாக உலர்த்த வேண்டிய தேவை இல்லா ததால், டிரையர் தேவையில்லை. இதனால், டிரையருக்கு தேவைப்படும் மின்சார செலவும் மிச்சமாகிறது.சாதாரண வாஷிங் மிஷின்களுக்கும், புதிய வாஷிங் மிஷினுக்கும் விலை யில் பெரியளவில் வித்தியாசம் இல்லை. அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக பிரிட்டன் முழுவதும், புதிய வாஷிங் மிஷின்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
--
20கிலோ சிப் போடணுமாம்। சிப்களை 100தரம்திருப்பி பயன்படுத்தலாமாம்। அதாவது 6மாசத்துக்கு ஒரு முறை

இதய நோய் மருத்துவத்தில்....

11/6/2008
சென்னை: கால்நடைகள், பன்றிகளில் இருந்து எடுக்கப்படும் வால்வுகள், ரத்த குழாய்கள், நரம்புகள், திசுக்கள் போன்றவை, மனிதர்களின் இதய நோயை குணப்படுத்த, நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 400 பேருக்கு இவை பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் செயல்பட்டு வரும் பிரான்டியர் லைப் மருத்துவமனை டாக்டர்கள் குழு, இதில் 100 சதவீதம் வெற்றி பெற்று வருகின்றனர். மனித இதயங்களில் சில பகுதிகளை மாற்ற முடியாத சிக்கல்கள் உள்ளன. செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிந்தடிக் ரத்தநாள குழாய்கள் பொருத்தப் பட்டால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்ப நேரிடுகிறது.

இதனால், பிரான்டியர் லைப் மருத்துவக்குழுவினர் கால்நடைகளின் ரத்த குழாய்கள், வால்வுகள், நரம்புகள், திசுக்களை பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள இரண்டு அதிநவீன, சுகாதாரம் மிக்க இறைச்சிக் கூடங்களுக்கு டாக்டர்கள் குழுவினர் செல்கின்றனர். அங்கு வெட்டப்படும் எருமைகளின் கழுத்துப்பகுதியில் உள்ள தொண்டை நரம்பை கவனமாக பிரித்து எடுக்கின்றனர். பன்றிகளில் உள்ள பல்மொனரி ரத்தக் குழாய்களையும் பிரித்துஎடுக்கின்றனர். இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியம் சவ்வையும் எடுக்கின்றனர். இவற்றை மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் விசேஷ கரைசலில் ஊற வைக்கின்றனர். இதன் மூலம், கிருமி தொற்று ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதில் மனித செல்களும் சேர்க்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் இந்த ரத்தக்குழாய்கள், தொண்டை நரம்பு, பெரிகார்டியம் ஆகியவை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில், ஆட்டுக்கு பொருத்தி பரிசோதிக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. ஏராளமானோர், நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மொனரி ரத்தக்குழாய் இல்லாமலேயே பிறக்கின்றனர். இவர்களுக்கு பல்மொனரி ரத்தக்குழாய் பொருத்தப்படுவது அவசியம். இவ்வாறு மனிதர்களுக்கு பொருத்தப்படும் ரத்தக்குழாய்கள், இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியம் இரட்டை சுவர் சவ்வு, போன்றவற்றில் ரத்த உறைதல், வேறு திரவ சுரப்பு போன்றவை மூன்று மாதத்துக்குள் ஏற்படாது. எனவே, இவற்றை வால்வுகளுடன் வெற்றிகரமாக முடிகிறது. பிரான்டியர் லைப் மருத்துவமனையில் இதுவரை 400 பேருக்கு இவை பொருத்தப் பட்டுள்ளன. ஒரே ஒருவரை தவிர, எல்லாருக்கும் இவை வெற்றிகரமாக பொருத்தப் பட்டு செயல்பட்டு வருகிறது. மத நம்பிக்கை கொண்டவர்கள் பன்றிகளில் இருந்து எடுக்கப்படும் ரத்தக்குழாய்கள் பொருத்தப்படுவதை விரும்புவது இல்லை. இதற்கு பதிலாக, எருமைகளில் இருந்து எடுக்கப்படும் கழுத்து நரம்புகள் வெற்றிகரமாக பொருத்தப்படுகின்றன.