அரிய தாவரம்

Posted by Picasa

௧0 பைசா தோசை

ஐதராபாத்: ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 360 கி.மீ., தொலைவில் உள்ளது கடப்பா நகரம். இங்குள்ள ஒரு சிறு கடை முன், தினமும் காலை நேரங்களில் ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்றபடி, மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் வேக, வேகமாக தோசைகளை, "உள்ளே' தள்ளுகின்றனர். இந்த அளவுக்கு கூட்டம் வர காரணம், தோசையின் விலை வெறும் 10 பைசா தான்.



இந்த உணவு கடையை நடத்தி வருபவர் முனி ரெட்டி (60); இவரது மனைவி ராம லட்சுமி. இவர்கள் நாள் தோறும், 2,000 தோசைகளை விற்பனை செய் கின்றனர். தோசைக்கு தொட்டுக் கொள்ள, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என, மூன்று வகையான சட்னியும் அளிக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள், 100 தோசை முதல் 200 தோசை வரை பார்சலாகவும் வாங்கி செல்கின்றனர்.



தனது அனுபவம் குறித்து முனி ரெட்டி கூறியதாவது: இந்த தோசை கடை யை, 50 ஆண்டுகளுக்கு முன், துவக்கி வைத்தவர் எனது தாய் சுப்பம்மா. அப்போது அவர், ஆறு பைசாவுக்கு (ஒரு அணா) தோசை விற்பனை செய்தார். 1970ம் ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், தோசையின் விலை 10 பைசாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு மேல், விலையை உயர்த்த கூடாது என, எனது தாய் கட்டளையிட்டார். அந்த கட்டளையை 20 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறேன்.



ஏழை மக்கள் தான், இந்த தோசையை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு தோசையை தயாரிக்க, ஒன்பது பைசா செலவாகிறது. சட்னி செலவு இதில் சேராது. எனினும், ஒரு பைசா லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறேன். விலைவாசி உயர்ந்து விட்டதால், தோசையின் அளவை குறைத்து விட்டேன். இருந்தாலும், காலை நேரங்களில், கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு நபர், ஆறு முதல் 10 தோசை வரை சாப்பிடுவார்.



இந்த சிறு வருமானம், எனது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது. இருந்தாலும், கூடுதல் வருமானத்துக்காக, பிஸ்கட், சிகரெட், மிட்டாய்கள், சோப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்கிறேன். ரேஷனில், குறைந்த விலையில் அரிசி கிடைக்கிறது. இருந்தாலும், அந்த அரிசியின் தரம் சிறப்பாக இல்லை. எனவே, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரிசியை வாங்குகிறேன். அவர்கள், 40 சதவீதம் விலையை குறைத்து, தருகின்றனர். இத்தொழிலில், எனது இரண்டு மகன்களுக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், என் உயிர் உள்ள வரை, 10 பைசா தோசையை விற்பனை செய்வேன்.

அகழ் வாராச்சி

சென்னை : "நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆதிச்சநல்லூர் தொன்மை யை வெளிப்படுத்தவும், அந்த இடத் தை பாதுகாக்கவும், உடனடியாக அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்' என்று தென்மாநில இயக்கத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.



சென்னையில் நேற்று இருவரும் அளித்த பேட்டி: டாக்டர் சேதுராமன்: திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில், மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்பொருள் துறையினால் நடத்தப்பட்ட அகழ் வாராச்சியில் கிடைத்துள்ள சான்றுகள் மூலம், தமிழ் நாகரிகம் உலக நாகரிகத்திற்கு இணையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் 140 ஆண்டுகளுக்கு முன், அகழ் வாராய்ச்சி செய்த ஜெர்மனிய ஆய்வாளர் டாக்டர் ஜாகர், 1903ம் ஆண்டு அப்பகுதியில் ஆய்வு செய்த ஆங்கிலேயே ஆய்வாளர் அலெக்சாண்டர் ரீ ஆகியோர், "திருநெல்வேலி மாவட்டம் தான் தெற்கு ஆசிய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அவர்கள் நான்காயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டுபிடித்துள் ளனர்.தமிழ் நாகரிகத்தின் தொன்மை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதும், ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள் ளதாக இப்போது தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆராய்ச்சியை அரசு நடத்த வேண்டும். அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். முதுமக்கள் தாழிகள், பானைகள் போன்ற தொன்மையான பொருட்கள் தினமும் அழிந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் ஆதாரங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து, உடனடியாக அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் மாதம் ஆதிச்சநல்லூரிலிருந்து தென்மாநில இயக்கத்தின் சார்பில் பேரணி நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும்.



தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன்: மகாராஷ் டிரா, கர்நாடகா மாநிலங்கள் தான் பானை தயாரிப்பில் முன்னோடியாக இருந்தன என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்லியல் துறை மேலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் முதுமக்களின் தாழிகளும், பானை ஓடுகளும், வெண்கலம், மற்றும் மண்டபாண்ட வகைகளும் கிடைத்துள்ளன. அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகள் தமிழ் நாகரிகத்தை மூன்றாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் செல்கின்றன. தமிழர்கள் தான் பானை தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினர் என்ற புதிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் அகழ் வாராய்ச்சி மேற்கொள்ள தனியார் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதேபோல் மத்திய அரசும், தனியார் அமைப்புகளும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட அங்கீகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் தொன்மையான பொருட்களை அழிவதை தடுக்க முடியும். திருநெல்வேலி மாவட் டத்தில் ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், பாளையங்கோட் டை உள்ளிட்ட 37 ஊர்களில் ஒவ்வொரு நாளும் முதுமக்கள் தாழிகள், பானைகள், கொள்கலன்கள் அழிக்கப் பட்டு வருகிறது. பானை தயாரிப்பில் தமிழகம் தான் முன்னோடி என்பதை கர்நாடகா, மகராஷ்டிரா மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதிச்சநல்லூரில் முழுமையான அகழ்வாராய்ச்சியை தமிழக அரசு நடத்தி அங்கு மறைந்து கிடக்கும் தமிழகத்தின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும் தற்போதைய ஈராக் நாட்டின் மெசபடோமியா நாகரிகத்துக்கும் பல ஒற்றுமை உள்ளது. திருமணத்தின் போது பெண்கள் தங்களது தலையில் தங்கத் தகடு கட்டும் பழக்கம் உள்ளது. அதேபோல் மெசபடோமியா பெண்களும் தங்களது திருமணத்தின் போது தலையில் தங்கத் தகடு அணிகின்றனர். உலகத்திலேயே நான்கு ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்த ஒரே இடம் ஆதிச்சநல்லூர் என்றால் மிகையல்ல.இவ்வாறு டி.கே.வி. ராஜன் கூறினார்.

கொசு ஒழிப்பு !

may 2, 2008

பெங்களூரு: கொசுக்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த புதுவகை நடைமுறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டி.ஆர்.டி.இ.,) கண்டுபிடித்துள்ளது. டி.ஆர்.டி.இ., அமைப்பின் வாழ்க்கை அறிவியல் மற்றும் மனித வள பிரிவின் தலைமை பொறுப்பாளர் செல்வமூர்த்தி கூறியதாவது: "லார்வா' என அழைக்கப்படும் முட்டைப்புழுக்கள், நீர் நிலைகளில் வெளிப்படுத்தும், பெரோமோனி ஹார்மோன் தான், பெண் கொசுக்கள் ஈர்த்து, முட்டைகளை இட வைக்கின்றன. பெரோமோனி ஹார்மோன் மற்றும் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளையும் ஒன்று சேர்த்து, "அட்ராக்சிசைட்' என்ற திரவத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த திரவத்தை, குறிப்பிட்ட நீர்நிலைகளில் தெளித்தால் போதுமானது. அந்த நீர்நிலைகளை தேடி வந்து கொசுக்கள் முட்டைகள் இடும். கொசுக்களின் இன பெருக்கம் குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும். இந்த சோதனையை, அமைச்சரவை செயலர் பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையை நடத்திப்பார்க்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் கூறியுள்ளார். இந்த சோதனையை, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டில்லி மாநிலங்கள் ஏற்கனவே, நடத்த தொடங்கி விட்டன. சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அசாமில் தேஸ்பூர் என்ற இடத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சிக் கூடம், மூலிகை கொசு விரட்டியை கண்டுபிடித்துள்ளது. நோய்களை பரப்பும் கருவியாக, கொசுக்களை பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஆராய்ச்சி நடக்கிறது. எனவே, மூலிகையை கொண்டு திரவ நிலையில் உள்ள கொசு விரட்டியும், கிரீமும் உருவாக்கப்படுகிறது. சாதாரண கொசு விரட்டி, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே பலன் தரும். ஆனால், மூலிகை கொசு விரட்டி, 12 மணி நேரம் பலன் தரும்; இது வடகிழக்கு மாநில எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு செல்வமூர்த்தி கூறினார்.

காஸ் ஸ்டவ்

may 2,2008

பெங்களூரு: "ஐரோப்பிய மாடல் காஸ் ஸ்டவ் வாங்கலாமா?' என்று தான் நகரங்களில் உள்ள பெண்களின் சிந்தனை போகிறது. ஆனால், சுற்றுச்சழல் பாதுகாப்புக்கு உண்மையாக பாடுபடுபவர்கள் நாங்கள் தான் என்று கிராம பெண்கள் சாதித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேடாக உள்ளவையாக சில மாசுகளை, ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிட்டுள்ளது. அதில், நான்காவதாக உள்ளது "கார்பன்' வாயு தான். பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், இந்த வாயு மிக மோசமாக சுற்றுச்சூழலை கெடுக்கிறது.

இவற்றின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நகரங்களில் உள்ள மக்கள் அதில் பெரிதும் அக்கறை காட்டுவதில்லை. சூரிய சக்தி மின்சாரம் முதல் ஸ்டவ் வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல பொருட்கள் உள்ளன. இந்த வகையில், சமீபத்தில் சிறிய ஸ்டவ் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பெயர் "ஊர்ஜா' சிறிய ஸ்டவ் என்றாலும், காஸ் அடுப்பு போல எரியும். காஸ் சிலிண்டர் செலவை விட பாதி தான் செலவாகும். தென்மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இந்த ஸ்டவ்வை பிரபலப்படுத்த கிராமங்களில் உள் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான "பிபி' சார்பில், இந்தியாவில் "பி.பி.,எனர்ஜி இண்டியா' என்ற நிறுவனம், இந்த ஸ்டவ்வை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அரசு உதவியோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போ இல்லை. கிராமங்களில் நேரடியாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிரசாரம் செய்து, பெண்களை நியமித்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள கிராமங்களில் 10 லட்சம் ஸ்டவ்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது இந்த நிறுவனம்.

இதற்காக, இந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களில் மூன்றாயிரம் பெண் விற்பனை பிரதிநிதிகளை நியமித்துவருகிறது. ஸ்டவ்வின் விலை 675 ரூபாய். இந்த ஸ்டவ்வில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது, வேர்க்கடலை சருகுகள் உட்பட விவசாய மிச்சம் மீதிகளை காயவைத்து, தயாரிக்கப்படும் உருண்டைகள் தான். ஒரு மூட்டை எரிபொருள் உருண்டைகள் விலை 50 ரூபாய். கர்நாடக கிராமங்களில் இப்போது படுபிசியாக இந்த ஸ்டவ்வை, கிராம மக்கள் வாங்கி வருகின்றனர். தமிழக கிராமங்களிலும் விரைவில் இந்த ஸ்டவ் விற்பனைக்கு வரும்.

ராஜா ராம் மோகன் ராய்

april 30, 2008

லண்டன் : பிரிட்டனில் அமைந்துள்ள, பிரபல சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் சமாதி, 165 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தியாவில், சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன் ராய். பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பகுதியில், 1833 ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு அங்கு சமாதி அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ராய் மீது, இந்தியர் பலருக்கும் தனி மரியாதை உண்டு. அதனால், பிரிட்டன் செல்லும் போது, ராயின் சமாதிக்கு சென்று வருவர். கடந்த, 20 ஆண்டாக சமாதியை கவனிப்பாரின்றி சிதைந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த, இந்தியர்கள் பலரும் பிரிட்டன் அரசுக்கு மனு அனுப்பினர். ஆனால், பிரிட்டன் அரசு கண்டுகொள்ளவில்லை.இந்த நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆதித்திய பொத்தார் என்பவர், 35 லட்சம் ரூபாய் நன்கொடை தந்துள்ளார். பிரிஸ்டல் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, ராயின் சமாதியை புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ராஜாராம் மோகன் ராய் சமாதியை புதுப்பிக்க 20 ஆண்டுக்கு பின் பணிகள் ஆரம்பமாக உள்ளன.சிங்கப்பூர் தொழிலதிபர், கோல்கட்டாவை சேர்ந்தவர். ராயின் மீதுள்ள மதிப்பால் அவர் நன்கொடை தந்துள்ளார்.பிரிஸ்டலில் உள்ள ராய் சமாதியில், அரியாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது உருமாறி உள்ளது. மேற்கு வங்க பாரம்பரிய முறைப்படி இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இதையும் புதுப்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.